புரட்டாசி சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.


புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தில் அமைந்துள்ள கோபிநாத சுவாமி கோயிலில் மூலவர் கோபிநாதருக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதேபோல் உற்சவருக்கு, பக்தர்கள் சார்பில் வழங்கப்பட்ட பால், தயிர், நெய், பன்னீர், இளநீர் ஆகியவற்றைக் கொண்டு நாள் முழுவதும் அபிஷேகம் செய்யப்பட்டது. ரெட்டியார்சத்திரம் கதிர் நரசிங்கப் பெருமாள் கோயிலில் மூலவருக்கு சந்தன காப்பு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. உற்சவர் மலரலங்காரத்தில் அருள்பாலித்தார். அதேபோல் ஆஞ்சநேயருக்கும் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நத்தம் கோவில்பட்டி ருக்மணி சத்தியபாமா சமேத வேணுராஜகோபாலசாமி கோயிலில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் துளசி, மல்லிகை, முல்லை, சம்மங்கி பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திண்டுக்கல் மலையடியவார சீனிவாசப் பெருமாள் கோயிலில் சுதர்சனயாகம் நடைபெற்றது. முன்னதாக சீனிவாசப் பெருமாளுக்கு திருமஞ்சன அபிஷேகம் நடைபெற்றது.
இதேபோல், தாடிக்கொம்பு சௌந்தரராஜப் பெருமாள் கோயில், குஜிலியம்பாறை ராமகிரி கல்யாண நரசிங்க பெருமாள் கோயில், வடமதுரை சௌந்தரராஜப் பெருமாள் கோயில், சின்னாளப்பட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
பெரியகுளம்: பெரியகுளம் அருகே தாமரைக்குளம் வெங்கடாஜலபதி கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். அதே போல் தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள நாமத்துவார் பிரார்த்தனை மையத்தில் சிறப்பு வழிபாடு மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.
பழனி: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய உபகோயில்களான லக்குமி நாராயணப் பெருமாள் கோயில், பாலசமுத்திரம் அகோபில வரதராஜப் பெருமாள் கோயில், வேணுகோபாலசுவாமி கோயில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காலையில் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு நகைகள், மாலைகள் சார்த்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சுவாமிக்கு மல்லிகை, துளசி மாலைகளை சார்த்தி பக்தர்கள் வழிபட்டனர். மேலும் வரதமாநதியை அடுத்த கண்ணாடி பெருமாள் கோயில், பாலசமுத்திரம் ரெங்கசாமி கரடு ராமர்பாதம் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோயில்களில் காலை முதல் மாலை வரை அன்னதானம் நடைபெற்றது.
போடி: போடியில் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பெருமாளுக்கு மஞ்சள், பால், இளநீர், குங்குமம், பழங்கள் உள்ளிட்ட 16 வகையான மங்கல பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் தங்க காப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதணை நடத்தப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் பாலகிருஷ்ணன், தலைமை அர்ச்சகர் சீனிவாச வரதன் ஆகியோர் செய்தனர்.
இதே போல் போஸ்பஜார் ராமர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் சக்திவேல், செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் ஏ.மாரிமுத்து உள்ளிட்டோர் செய்திருந்தனர். மேலும் தொட்டராயசுவாமி ஒன்னம்மாள் கோவில், மேலச்சொக்கநாதபுரம் தொட்டராயசுவாமி ஒன்னம்மாள் கோவில், ரெங்கநாதர் கோயில், தேவாரம் ரெங்கநாதசுவாமி கோயில் ஆகியவற்றிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
உத்தமபாளையம்: கோம்பையில் திருமலை ராயப்பெருமாள் கோயில் புரட்டாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மலை அடிவாரக்கோயில் உற்சவரான திருமலைராயப்பெருமாள் பச்சைப்பட்டு அணிந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com