கொடைக்கானலில் தொடர் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்ததால், வெள்ளிக்கிழமை பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கொடைக்கானலில் தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகின்றனர். வெள்ளிநீர் வீழ்ச்சி, பசுமைப் பள்ளத்தாக்கு, பில்லர்ராக், மோயர் பாயிண்ட், பைன் பாரஸ்ட், குணா குகை, கோக்கர்ஸ்வாக்,பிரையண்ட் பூங்கா, தாவரவியல் பூங்கா, ஏரிச்சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
மேலும் நட்சத்திர ஏரியில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் சைக்கிள் சவாரி, குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்தனர். சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பால் அப்சர்வேட்டரி சாலை, செவண் ரோடு, உட்வில் ரோடு, பூங்கா சாலை, லாஸ்காட் சாலை, அண்ணாசாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தற்போது சீசன் தொடங்கியுள்ளதால் மாவட்ட நிர்வாகம் கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு இடவசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.