பழனி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை பொதினி இலக்கியச் சந்திப்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நெய்க்காரப்பட்டி அரிமா சங்கத் தலைவர் மயில்சாமி தலைமை வகித்தார். பேராசிரியர் மீனாசுந்தர் வரவேற்றார். ரமேஷ், ராம்தாஸ்காந்தி, முனைவர் குமார் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். எழுத்தாளர்கள் சந்திரா மனோகரன் எழுதிய பன்முகம் சிறுகதை நூல் குறித்து, பேராசிரியர் கார்த்திகேயனும், வரதராஜமாணிக்கம் எழுதிய ஜிங்லி என்ற சிறுகதை நூல் குறித்து, பேராசிரியர் சுதாராணியும், புதியபாணன் காலாண்டிதழ் குறித்து பேராசிரியர் ராம்கணேஷூம், சிகரம் சிற்றிதழ் குறித்து பேராசிரியர் தமிழ்சிவாவும் நூல்களை வெளியிட்டு மதிப்புரை வழங்கினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக எழுத்தாளர் சந்திரா மனோகரனுக்கு ரூ. 5 ஆயிரம் அடங்கிய பொற்கிழியை பழனி எழில்மாறன் வழங்கினார். விழா அரங்கில் பல்வேறு நூல்கள் குறித்து விவாதமும், கருத்துப் பகிர்வும், படைப்பரங்கம், வாசித்ததில் சிறந்தவை குறித்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.