கொடைக்கானலில் நகராட்சி கடைகளுக்கு "சீல்'
கொடைக்கானலில் வாடகை கட்டாத நகராட்சி கடைகளுக்கு திங்கள்கிழமை பூட்டி சீல் வைக்கும் பணி நடைபெற்றது.
கொடைக்கானல் நகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் நூற்றுக்கணக்கான கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் பல கடைகள் பல மாதங்களாக வாடகை பாக்கி வைத்துள்ளன. இந் நிலையில் வாடகை செலுத்தாத கடைகளை பூட்டி சீல் வைக்கும் பணியினை நகராட்சி வருவாய் ஆய்வாளர் சரவணன் மற்றும் பணியாளர்கள் மேற்கொண்டனர். இந்த பணியின் போது கோக்கர்ஸ்வாக் பகுதி, ஏரிச்சாலை, அப்பர்லேக் வியூ போன்ற பகுதிகளிலுள்ள 14 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன.
மேலும் கொடைக்கானல் பகுதிகளிலுள்ள வீடு மற்றும் தங்கும் விடுதிகள், உணவகங்களில் உள்ள குடிநீர் இணைப்புக்கு வரி செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாத குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு வருகிறது. எனவே வரி செலுத்தாதவர்கள் உடனடியாக வரி செலுத்த வேண்டுமென நகராட்சி ஆணையர் முருகேசன் தெரிவித்துள்ளார்.