கொடைக்கானலில் குறிஞ்சி நகர் கீழ் ஆற்றுப் பகுதியில் சாலை அமைத்து தரக்கோரி பொது மக்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பகுதியான குறிஞ்சிநகர் கீழ் ஆற்றுப் பகுதியில் 100 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் இவர்களுக்கு கல்றைமேடு பகுதியிலிருந்து பெட்டிக்கடை வரை பொதுப் பாதை இருந்து வந்தது. இந்தப் பாதையில் சாலை அமைத்து தரவேண்டுமென அப் பகுதி மக்கள் பல ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகத்திற்கும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கும் கோரிக்கை மனு கொடுத்து வந்தனர். இங்குள்ள ஆற்றில் மழைக்காலங்களில் தண்ணீர் அதிகமாகச் சென்றால் யாரும் கடந்து செல்ல முடியாது. இதனால் கீழ் ஆற்றுப் பகுதியிலுள்ள பொதுமக்கள் சுமார் 2 கி.மீ தூரம் சுற்றி கல்லறைமேட்டுப் பகுதிக்கு வரவேண்டும். இதுகுறித்தும் கோரிக்கை மனு அளித்தனர்.
இந்நிலையில் கீழ்ஆற்றுப் பகுதியில் சாலை அமைத்து தரவேண்டுமெனக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். அதன் பின் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மகேந்திரன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) பட்டுராஜனிடம் தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் கேட்டு மனு கொடுத்தனர்.
இதுகுறித்து கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மகேந்திரன் கூறியதாவது, கொடைக்கானல் கீழ் ஆற்றுப் பகுதியில் சாலை வசதிகேட்டு அப் பகுதியைச் சேர்ந்த மக்கள் மனு கொடுத்துள்ளனர். இது தொடர்பாக அப் பகுதியில் ஆய்வுப் பணி நடைபெற்று வருகிறது. ஆய்வு முடிந்தபின் சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.