பழனி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழாவையொட்டி யானை வாகனத்தில் மாரியம்மன் பவனி நடைபெற்றது. மேலும் செவ்வாய்க்கிழமை (பிப். 19) திருக்கல்யாணமும், புதன்கிழமை மாசித்தேரோட்டமும் நடைபெறவுள்ளது.
இக்கோயிலில் மாசித்திருவிழா கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி இரவு திருக்கம்பம் சாட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி கொடியேற்றம் மற்றும் பூவோடு வைத்தல் நடைபெற்றது. இதையடுத்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூடச்சட்டி, பூவோடு எடுத்து வந்து மாரியம்மனுக்கு நேர்ச்சை செலுத்தி வருகின்றனர்.
கோயில் முன்பாக வாழைப்பழம், அரிசி போன்றவை சூறைவிடப்பட்டு வருகிறது. விழா நாள்களில் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அம்மன் ரதவீதி உலாவும் நடைபெற்று வருகிறது. வெள்ளி ரிஷபம், தங்கக்குதிரை, வெள்ளியானை உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் உலா எழுந்தருளிய நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இரவு 8 மணிக்கு மேல் திருக்கல்யாண நிகழ்ச்சியை தொடர்ந்து அம்மன் கொலு இருத்தலும், புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்தலும் நடைபெறுகிறது. தேரோட்டத்தை தொடர்ந்து அம்மன் வண்டிக்கால் பார்த்தல், வாணவேடிக்கை நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை பழனிக்கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் (பொறுப்பு) செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் செய்து வருகின்றனர்.