கொடைக்கானல் அருகே தாண்டிக்குடியில் தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் விவசாய கருத்தரங்கு இரண்டாம் நாளாக வியாழக்கிழமை நடைபெற்றது.
கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான தாண்டிக்குடியில் உள்ள தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்திய மலைப் பிரதேச பயிர்களில் உயர் தொழில் நுட்பம் குறித்த சாகுபடி கருத்தரங்கம் தாண்டிக்குடி மண்டல காபி ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் உயிரி தொழில் நுட்ப சாகுபடி பயிர்களில் ஏற்படும் நோய்தாக்குதல் மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்துவது, இயற்கை உரம் தயாரிப்பது, மண் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது. இதில் நோயியல் துறை பேராசிரியர் சௌந்தராஜன், பூச்சியியல் துறை பேராசிரியர் முத்தையா, தோட்டக்கலை உதவி இயக்குநர் ராஜமுருகன் ஆகியோர் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.
இரண்டு நாள்கள் நடைபெற்ற இக் கருத்தரங்கில் பூண்டி, பூம்பாறை, பண்ணைக்காடு, தாண்டிக்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 75-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.