திண்டுக்கல் மாவட்டத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் 1.49 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும் என வனத்துறை அமைச்சர் சி.சீனிவாசன் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி நகராட்சியில் மின்கலத்தால் இயங்கும் குப்பை அள்ளும் வாகனங்கள், இலகுரக வாகனங்கள் மற்றும் ஒப்பந்த பணிக்கான வேலை உத்தரவு ஆணை வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக வனத்துறை அமைச்சர் சி.சீனிவாசன் கலந்து கொண்டு பேசியதாவது:
பழனி நகராட்சி பகுதியில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. தூய்மை இந்தியா, திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் மூலம் ரூ.64 லட்சம் மதிப்பீட்டில் மின்கலத்தால் இயங்கும் குப்பை அள்ளும் 20 வாகனம் மற்றும் 5 இலகுரக வாகனம் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், விகிதாச்சார அடிப்படையில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் மேற்கொள்ளுவதற்கென 81 ஒப்பந்த பணியாளர்களை ரூ.1.20 கோடி செலவினத்தில் நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, ஒப்பந்தப் பணிக்கான வேலை உத்தரவு ஆணை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.2000 வழங்கும் திட்டத்தினை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் 1.49 லட்சம் குடும்பங்களுக்கு இந்த நிதி கிடைக்கும் என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சாலையோர வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தகுதியான குடும்பங்களுக்கும் ரூ.2 ஆயிரம் நிதி உதவி கிடைப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.
தகுதியான நபர்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் விண்ணப்பங்களை வழங்கி, ஒப்புகைச் சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். ஆய்வுக்குப் பின், தகுதியுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் அரசின் உதவித் தொகை கிடைக்கும் என்றார்.