பழனி அருகே ஆயக்குடியில் பக்கத்து வீட்டு குழந்தைகள் தனது வீட்டின் முன்பாக விளையாடியதால் ஆத்திரமடைந்த கிராம நிர்வாக அலுவலர், அக்குழந்தைகள் மீது அமிலத்தை வீசியதில், அவர்கள் பலத்த காயமடைந்தனர்.
பழைய ஆயக்குடி 5 ஆவது வார்டை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகன்கள் குமரன்(11), கார்த்திக் சரவணன் (2). இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் சின்னச்சாமி மகன் பரந்தாமன், திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், சிறுவன் குமரனும், குழந்தை கார்த்திக் சரவணனும் பரந்தாமன் வீட்டினருகே விளையாடுவது வழக்கமாம். இது பிடிக்காத பரந்தாமன், அடிக்கடி குழந்தைகளை விரட்டி வந்துள்ளார். திங்கள்கிழமையும் குழந்தைகள் இருவரும் வழக்கம்போல் பரந்தாமன் வீட்டின் முன்பாக விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, பரந்தாமன் தனது வீட்டின் மாடியிலிருந்து குழந்தைகள் மீது பாட்டிலில் இருந்து அமிலத்தை வீசியுள்ளார். அது, குழந்தைகளின் மீது விழுந்ததில், எரிச்சல் ஏற்பட்டதால் குழந்தைகள் அலறியுள்ளனர்.
உடனே, அங்கு ஓடிவந்த குழந்தைகளின் தாயார் இலக்கியா இது குறித்து பரந்தாமனிடம் கேட்டபோது, அப்படித்தான் வீசுவேன் எனத் தெரிவித்துள்ளார். அதையடுத்து, குழந்தைகளை பழனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தைகள் ஜீன்ஸ் ஆடைகள் அணிந்திருந்ததால், பெரிய காயத்திலிருந்து தப்பினர். இது குறித்து இலக்கியா அளித்த புகாரின்பேரில், ஆயக்குடி காவல் நிலைய ஆய்வாளர் முத்துலட்சுமி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.