கொடைக்கானலில் சனிக்கிழமை குளிர் காய தீ மூட்டியவர் புகை மூட்டத்தில் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.
கொடைக்கானல் இந்திரா நகரைச் சேர்ந்த மாரியப்பன் மகன் குமரன் (36). இவர் கொடைக்கானலில் உள்ள ஒரு ஹோட்டலில் ஸ்டோர் கீப்பராக கடந்த 10 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், குமரன் வழக்கம்போல் வெள்ளிக்கிழமை வேலைக்குச் சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை .
இந்நிலையில் குமரன் குடும்பத்தினர் அவர் வேலைபார்த்த ஹோட்டலுக்கு சென்று விசாரித்தனர். அப்போது ஹோட்டலில் உள்ள பணியாளர்கள் அவர் பணியாற்றிய ஸ்டோர் அறையை திறந்து பார்த்தனர். அப்போது அறையின் உள்ளே புகை மூட்டம் இருந்தது. மேலும், குமரன் அங்கு இறந்து கிடந்தார். குளிருக்கு தீ மூட்டி குளிர் காய்ந்தபோது புகைமூட்டத்தில் மூச்சு திணறி உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து குமரனின் தாயார் பழனியம்மாள் அளித்த புகாரின்பேரில் கொடைக்கானல் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.