திண்டுக்கல்மாவட்டம், வத்தலகுண்டு அருகே சனிக்கிழமை குடும்பத்தகராறில் மைத்துனர் கொலை செய்யப்பட்டார். மேலும், 4 பெண்கள் காயமடைந்தனர்.
வத்தலகுண்டு அடுத்துள்ள ராமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம் (44). இவரது மனைவி செல்வி (35). இவர், கணவருடனான தகராறில் விரூவீடு அடுத்துள்ள குன்னூத்துப்பட்டியில் உள்ள தனது தம்பி தொத்தகாளை (34) வீட்டுக்கு சென்றுவிட்டாராம். இந்நிலையில் செல்வம் தனது மனைவியை சமாதானப்படுத்தி அழைத்துவர சனிக்கிழமை அங்கு சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த செல்வம் தனது மனைவி செல்வி, மைத்துனர் தொத்தகாளை, அவரது மனைவி முத்துலட்சுமி, உறவினர்கள் பேச்சியம்மாள், வெள்ளையம்மாள் ஆகியோரை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டாராம். இதில் பலத்த காயமடைந்த தொத்தகாளை வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
செல்வி, முத்துலட்சுமி, பேச்சியம்மாள், வெள்ளையம்மாள் ஆகிய 4 பேரும் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து விரூவீடு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.