பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவில் திங்கள்கிழமை திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.
பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசப் பெருவிழா கடந்த ஜனவரி 15 இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறும் விழாவை முன்னிட்டு தினமும் வள்ளி, தெய்வானை சமேதர் முத்துக்குமாரசாமி வெள்ளிக் காமதேனு, வெள்ளி யானை, வெள்ளி ஆட்டுக்கிடா உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் 4 ரத வீதி உலா வந்து எழுந்தருளினார். பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாலை வள்ளி, தெய்வானை சமேதர் முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. பொற்சுண்ணம் இடித்தல் உள்ளிட்ட பல்வேறு சம்பிரதாய நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து தம்பதி சமேதர் சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் சோடஷ அபிஷேகமும், தொடர்ந்து சோடஷ உபச்சாரமும் நடைபெற்றது.
மங்கலநாணுக்கு பூஜைகள் நடைபெற்ற பின் மேளதாளம் முழங்க வேதவிற்பன்னர்கள் மந்திரம் ஓத, ஓதுவார்கள் திருமுறைப்பாடல்கள் பாட நடைபெற்ற மங்கலநாண் அணிவித்தல் நடைபெற்றது.
தொடர்ந்து தம்பதி சமேதர் முத்துக்குமாரசாமி வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பெரிய வெள்ளித்தேரில் எழுந்தருளினார். பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க தேர் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்தது. இதை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
நிகழ்ச்சியில் பழனிக்கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர்(பொறுப்பு) செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
விழாவில் திங்கள்கிழமை மாலை தைப்பூசத் திருத்தேரோட்டம் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு மாவட்டத்தில் திங்கள்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நிறைவு நாள் நிகழ்ச்சியாக ஜனவரி 24 இல் தெப்பத்தேர் உலா மற்றும் திருக்கொடி இறக்கம் நடைபெறுகிறது.