நத்தம் அருகே திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியதில், இளைஞர் உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி அடுத்துள்ள பெருமாள் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் செல்வக்குமார் (24). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர், தனது தம்பி கணபதியுடன் (21) இரு சக்கர வாகனத்தில் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சிக்கு சென்றுள்ளார்.
இரு சக்கர வாகனத்தை கணபதி ஓட்டிச் சென்றுள்ளார். திண்டுக்கல்-நத்தம் சாலையில் உலுப்பகுடி அருகே சென்று கொண்டிருந்தபோது, காரைக்குடியிலிருந்து பழனி நோக்கி வந்த அரசுப் பேருந்து மோதியது. இதில், பலத்த காயமடைந்த செல்வக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து நத்தம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.