திண்டுக்கல்லில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த இருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
திண்டுக்கல் நெட்டுத் தெருவைச் சேர்ந்த பாண்டி மகன் சூர்ய பிரகாஷ் (24). இவர் திண்டுக்கல் ஆர்.எஸ்.சாலையிலுள்ள தனியார் திருமண மண்டபம் முன்பு நின்று கொண்டிருந்த போது, 2 மர்ம நபர்களால் திங்கள்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி சூர்ய பிரகாஷின் உறவினர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்திய போலீஸார், கொலையாளிகளை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தனர்.
அதன்படி, சூர்ய பிரகாஷை கொலை செய்ததாக நெட்டுத் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் அஜீத்(24), மாலைப்பட்டியைச் சேர்ந்த சேதுராம் மகன் ஜெகன்(23) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியது: நெட்டுத் தெருவைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கத்தால், சூர்ய பிரகாஷ் மற்றும் அஜீத் ஆகியோரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அஜீத், ஜெகனுடன் சேர்ந்து சூர்ய பிரகாஷை கொலை செய்ததாக தெரிவித்தனர்.