இளைஞரைத் தாக்கி இருசக்கர வாகனத்தைப் திருடிச் சென்ற கும்பல் குறித்து போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை யாகப்பாநகரை சேர்ந்தவர் அம்முனி என்ற அருள்பாண்டி. இவர் மீது வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் தனது நண்பர்கள் சிலருடன் ஞாயிற்றுக்கிழமை அண்ணாநகர் முந்திரிதோப்பு பகுதிக்கு ஆட்டோவில் வந்தார். அவர்கள் அங்கு திடீரென ரகளையில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் இருசக்கர வாகனத்தில் அதே பகுதியை சேர்ந்த சரவணன்(25) என்பவர் அங்கு வந்தார். இதில் அருள்பாண்டி தரப்பினருக்கும் சரவணனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து தாங்கள் வைத்திருந்த இரும்பு கம்பியால் சரவணனின் தலையில் தாக்கினர். இதில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். பின்னர் அவருடைய இருசக்கர வாகனத்தையும், ஆட்டோவையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது. சரவணனை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அண்ணாநகர் போலீஸார் வழக்குபதிவு செய்து தலைமறைவானவர்களை தேடிவருகின்றனர்.