திருப்பரங்குன்றம் கோயில் மற்றும் திருமண மண்டபங்களில் ஒரே நாளில் 150-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன.
ஐப்பசி மாத வளர் பிறை முகூர்த்தத்தையொட்டி திருப்பரங்குன்றம் கோயிலில் 45 திருமணங்கள், பரிகார திருமணங்கள் 30 மற்றும் திருமண மண்டபங்களில் என ஒரே நாளில் 150 க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன.
தற்போது கோயிலில் தங்கி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கந்தசஷ்டி விரதமிருப்பதால் கூட்டம் அதிகளவில் இருந்தது.
மேலும் திருமங்கலம் செல்லும் பேருந்துகள் தற்போது திருப்பரங்குன்றம் வழியாகச் செல்கின்றன. திருப்பரங்குன்றம் நகரில் தெப்பக்குளம் அருகே ஜி.எஸ்.டி. சாலையில் வாகனங்கள் நிறுத்துவதால் பேருந்துகள் செல்ல வழியில்லாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விழாக் காலங்களில் அப்பகுதியில் வாகனங்களை நிறுத்த போக்குவரத்து போலீஸார் தடை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல திருப்பரங்குன்றம் பெரியரத வீதி, கீழரத வீதி ஆகிய பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பக்தர்கள் கடும் அவதியுற்றனர்.