மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கணவரை கொலை செய்து தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய மனைவி, தந்தையை போலீஸார் கைது செய்தனர்.
திருமங்கலம் அருகே உள்ள சிந்துபட்டி நாகலாபுரத்தைச் சேர்ந்த காசிமாயன் மகன் மொக்கமாயன்(40). மரம் ஏறும் தொழிலாளி. இவரது மனைவி முத்து(34). மொக்கமாயனுக்கு மதுப்பழக்கம் இருப்பதால் வீட்டில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இந்நிலையில் மொக்கமாயன் திங்கள்கிழமை இரவு வீட்டில் விஷம் குடித்த நிலையில் உசிலம்பட்டி அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மதுரை அரசு மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை காலை கொண்டுவரப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதுதொடர்பாக சிந்துபட்டி போலீஸார் மொக்கமாயனின் குடும்பத்தினரிடம் விசாரித்த போது, மொக்கமாயனை குடும்பத்தினர் கண்டித்ததால் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து மொக்கமாயனின் சடலத்தை போலீஸார் ஆய்வு செய்தபோது அவரது உடலில் காயங்கள் இருப்பதை கண்டு சந்தேகமடைந்த போலீஸார், மொக்கமாயனின் மனைவி முத்துவிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் திங்கள்கிழமை இரவு மதுஅருந்தி விட்டு வீட்டுக்கு வந்த மொக்கமாயன் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவரை தாக்கியுள்ளார். இதை மொக்கமாயனின் தந்தை காசிமாயன், முத்துவின்உறவினர் ஜோன்ஸ் ஆகியோர் கண்டித்துள்ளனர். இதில் ஆத்திரமடைந்த மொக்கமாயன் அவர்களையும் தாக்கியுள்ளார். இதையடுத்து மொக்கமாயனின் தந்தை காசிமாயன், மனைவி முத்து, உறவினர் ஜோன்ஸ் மூவரும் சேர்ந்து மொக்கமாயனை தாக்கி அவரது வாயில் வலுக்கட்டாயமாக விஷத்தை ஊற்றியுள்ளனர். இதில் மயங்கி விழுந்த மொக்கமாயனை தற்கொலைக்கு முயன்றதாகக் கூறி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளதும் தெரிய வந்தது. இதையடுத்து சிந்துப்பட்டி போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து மொக்கமாயனின் தந்தை காசிமாயன், மனைவி முத்து ஆகியோரை கைது செய்தனர். மேலும் உறவினர் ஜோன்ஸை தேடி வருகின்றனர்.