மதுரை மாவட்டம் பேரையூர் அருகே குடும்பத் தகராறில் மனைவியின் தலையை துண்டித்து கொலை செய்த கணவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
பேரையூர் அருகே உள்ள பெரியபூலாம்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்த விவசாயி பெத்தணன்(69). இவரது மனைவி மாரியம்மாள்(60). இவர்களுக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர். இதில் பெத்தணனுக்கும், மனைவி மாரியம்மாளுக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் மாரியம்மாள் கணவர் பெத்தணனை விட்டு பிரிந்து பேரையூர் மீனாட்சிபுரத்தில் உள்ள மகள் வீட்டில் கடந்த 6 மாதமாக வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த இரு நாள்களுக்கு முன்பு மகள் வீட்டுக்குச் சென்ற பெத்தணன், மனைவி மாரியம்மாளை சமாதானப்படுத்தி பெரியபூலாம்பட்டிக்கு அழைத்து வந்துள்ளார்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் கணவர், மனைவி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த பெத்தணன், வீட்டில் இருந்து அரிவாளை எடுத்து மனைவி மாரியம்மாளின் தலையை துண்டித்து கொலை செய்தார்.
இதில் சப்தம் கேட்டு பக்கத்து வீட்டினர் சென்று பார்த்தபோது மாரியம்மாள் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
இதுதொடர்பான தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற பேரையூர் போலீஸார் மாரியம்மாள் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கணவர் பெத்தணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.