இலங்கை சிறையிலிருந்து ராமநாதபுரம்,  புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 22 பேர் விடுதலை

இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களைச்

இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 22 மீனவர்கள் விமானம் மூலம் வியாழக்கிழமை மதுரைக்கு வந்து சேர்ந்தனர்.
 இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட 22 மீனவர்களை மீன்வளத்துறை (மண்டபம்) உதவி இயக்குநர் கோபிநாத் தலைமையிலான குழுவினர் இலங்கையிலிருந்து விமானம் மூலம் மதுரை அழைத்து  வந்தனர். இதில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் பகுதியைச் சேர்ந்த ராஜா, ராஜாராமன், பாலையா, லட்சுமணன், மாரிமுத்து, பசீர், அருள், சுப்பிரமணியன், செல்வம், நாகராஜன், ராமன் ஆகிய 11 மீனவர்களும் வேன் மூலமாக புதுக்கோட்டைக்கு சென்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமேசுவரம், மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த முருகன், கோபால், உளராபாண்டி, அலங்காரம், ராஜபாண்டி, ராபின்சன், முத்துக்குமார், ஜெயசீலன், ராஜாராமன், பாலகுமார், அருள் ஆகிய 11 மீனவர்களும் வேன் மூலம் ராமநாதபுரம் வந்தடைந்தனர்.
இதைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 11 பேரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கொ.வீரராகவராவை சந்தித்து நன்றி தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து மீனவர்கள் 11 பேரும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அப்போது மீன்வளத்துறை கூடுதல் இயக்குநர் ஜானி.டோம்வர்கீஸ், துணை இயக்குநர் இ.காத்தவராயன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதுகுறித்து மீனவர் செல்வம் கூறியது: நாங்கள் சென்ற படகு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடலில் நின்றது. அப்போது காற்றின் வேகம் அதிகமானதால் எங்கள் படகு இலங்கை எல்லைக்குள் சென்றுவிட்டது. அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எங்களை கைது செய்தனர். மேலும் மீனவர்கள் அனைவரையும் அடித்து மிகவும் துன்புறுத்தினர். வலைகளையும் அறுத்து கடலில் எறிந்தனர். மேலும் படகுகளையும் சேதப்படுத்தினர் என்றார்.  
ஜெகதாபட்டினம் மீனவர் சங்கத் தலைவர் செல்லத்துரை கூறியது: மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மீனவர்களை மட்டும் விடுவித்ததோடு, படகுகளையும் 
விடுவிக்க வேண்டும். ஒவ்வொரு படகின் விலையும் ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை இருக்கும். மீனவர்கள் கடன்வாங்கி படகுகளை வாங்குகின்றனர். அவற்றை பறிமுதல் செய்வதால் மீனவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலை ஏற்படுகிறது. மீனவர் பிரச்னைக்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காணவேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com