குடும்ப அட்டைதாரர்களுக்கு பொதுவிநியோகத் திட்ட பொருள்கள் முழுமையாகக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என வழங்கல் துறையினருக்கு உணவு ஆணையத் தலைவர் உ.வாசுகி அறிவுறுத்தினார்.
உணவு ஆணையத் தலைவர் உ.வாசுகி மதுரையில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். வில்லாபுரத்தில் கூட்டுறவு சங்க நியாய விலைக்கடை, திருமங்கலத்தில் மின்வாரிய ஊழியர் கூட்டுறவு சங்க நியாய விலைக்கடை, மதுரை மேற்கு சரகத்தில் பொன்னகரத்தில் உள்ள மதுரா கோட்ஸ் கூட்டுறவு பண்டகசாலை ஆகிய கடைகளில் தணிக்கை செய்தார். முன்னுரிமை உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு (பி.எச்.எச்) நிர்ணயிக்கப்பட்ட அளவில் அரிசி வழங்கப்படுகிறதா என்பதை விற்பனையாளர்களிடமும், குடும்ப அட்டைதாரர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசியது: மின்னணு அட்டை கிடைக்காதது, குடும்ப அட்டைக்கு முழுமையாகப் பொருள்கள் வழங்குவதில்லை இவை இரண்டும் தான் குடும்ப அட்டைதாரர்கள் தரப்பில் வரக்கூடிய புகார்களாகும். இதில் வழங்கல் அலுவலர்கள் உரிய கவனம் செலுத்த வேண்டும். உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி, பொதுமக்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவு அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார். மாவட்ட ஆட்சியர் ச. நடராஜன், வருவாய் அலுவலர் ரெ.குணாளன், மாவட்ட வழங்கல் அலுவலர் முருகேஸ்வரி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜசேகரன், கோட்டாட்சியர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள், குடிமைப் பொருள் வட்டாட்சியர்கள் கலந்து கொண்டனர்.