மதுரையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் எஸ்.டி.எச்.ஜெயின் வித்யாலயா பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.
மதுரை மாவட்ட நீச்சல் கழகம் சார்பில், மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான நீச்சல் போட்டி ரேஸ்கோர்ஸ் எம்ஜிஆர் விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.
இதில், மதுரை மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். போட்டிகள் 7 பிரிவுகளாக நடத்தப்பட்டன. இதில், அதிக புள்ளிகளை பெற்ற எஸ்.டி.எச். ஜெயின் வித்யாலயா பள்ளி முதலிடத்தைப் பெற்றது. மகாத்மா மாண்டிசோரி பள்ளி, வேலம்மாள் வித்யாலயா, லெட்சுமி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, சிஇஓஏ பள்ளி ஆகியன முறையே 2 முதல் 5-ஆவது இடத்தைப் பெற்றன.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், ஒட்டுமொத்த அணிக்கான இடங்களைப் பிடித்தவர்களுக்கும், மதுரை காமராஜர் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநர் சந்திரசேகர் பரிசுகளை வழங்கினார். அரிமா சங்க மாவட்ட ஆளுநர் பாரி பரமேஸ்வரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் கே. ராஜா, மதுரை மாவட்ட நீச்சல் கழகச் செயலர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.