மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள குட்லாடம்பட்டி அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை வனப்பகுதியில் கனமழை பெய்யும் காலங்களில் குட்லாடம்பட்டி தாடகை நாச்சியம்மன் அருவியில் நீர்வரத்து இருக்கும். குறிப்பாக வடகிழக்கு பருவமழை காலங்களில் அருவியில் நீர்வரத்து இருக்கும் என்பதால், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத் துறையினரால் அனுமதி வழங்கப்படும். கடந்த சில வாரங்களாக நீர்வரத்து இருந்ததால் அருவிக்கு, சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், கஜா' புயல் காரணமாக வியாழக்கிழமை கனமழை பெய்ததையடுத்து அருவிப் பகுதியில் இருந்த தடுப்பு கம்பிகள் சேதமடைந்துள்ளன. மேலும் அருவியில் அதிகளவில் தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டுகிறது. இதையடுத்து வனத்துறையினர் குட்லாடம்பட்டி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்குத் தடை விதித்துள்ளனர். இதனால் அருவிக்கு குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.