சாலை வசதி: பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு

மதுரை மாவட்டம், அரிட்டாபட்டி அருகே வனத்துறை அனுமதி கிடைக்காததால் சாலை சீரமைப்புப் பணிகள்

மதுரை மாவட்டம், அரிட்டாபட்டி அருகே வனத்துறை அனுமதி கிடைக்காததால் சாலை சீரமைப்புப் பணிகள் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதாக பள்ளி மாணவர்கள், அக்கிராம மக்கள்  ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பான கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியர் ச.நடராஜனிடம் திங்கள்கிழமை அவர்கள் அளித்தனர். அதன் விவரம்: அரிட்டாபட்டி முதல் நரசிங்கம்பட்டி வரை தார்ச் சாலையில் அரசுப் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், 1.5 கி.மீ. மட்டும் பெருமாள் மலை வழியாகச் செல்கிறது. இச் சாலையில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் பெருமாள் மலைப் பகுதியில் மட்டும் பணிகள் நடைபெறவில்லை. மேற்படி 1.5 கி.மீ. தொலைவுக்கு நெடுஞ்சாலைத் துறையினர், ரூ.9 லட்சத்தை செலுத்தி வனத்துறையிடம் உரிய அனுமதியைப் பெறவில்லை என கூறுகின்றனர். இதனால் சாலைப் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
பாசனத்துக்கு தண்ணீர்: திருமங்கலம் அருகே சின்ன உலகாணி கிராமத்தில் சுமார் 800 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி இல்லாமல் உள்ளன. சின்ன உலகாணியில் இருந்து 1 கி. மீ. தொலைவில் உள்ள கொம்பாடி கிராமம், வைகை கால்வாய் பாசனம் பெறுகிறது.
 அங்கிருந்த எங்களது கிராமத்துக்கான கால்வாய் மறைக்கப்பட்டு அழிந்துபோய்விட்டது. ஆகவே, அந்த கால்வாயை மீட்டு பாசன வசதி ஏற்படுத்தித் தரவேண்டும் என சின்ன  உலகாணி கிராமத்தினர் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். 
இதேபோல், கூடக்கோவில் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், நிலையூர் கால்வாயில் இருந்து கம்பிக்குடி வரை செல்லும் நீட்டிப்பு கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் எனக் கோரி மனு அளித்தனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி: உசிலம்பட்டி வட்டம், கருமாத்தூர் அருகே உள்ள வடக்கம்பட்டி காலனியில் 60 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆதிதிராவிடர் நலத்துறையால் வழங்கப்பட்ட இந்த நிலத்துக்கு பத்திரம் மட்டுமே உள்ளது. இந்நிலையில், எங்களது குடியிருப்புகளைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆக்கிரமித்து வருகின்றனர். ஆகவே, எங்களது நிலங்களுக்கு பட்டா வழங்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடக்கம்பட்டி காலனியைச் சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர். 
இதேபோல பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  திங்கள்கிழமை நடந்த குறைதீர் கூட்டத்தில் ஆட்சியரிடம் 351 மனுக்கள் அளிக்கப்பட்டன. மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 பேருக்கு முதியோர் உதவித் தொகை வழங்குவதற்கான உத்தரவையும், நலிவுற்ற கலைஞர்கள் 22 பேருக்கு உதவித் தொகையையும் ஆட்சியர் ச.நடராஜன் வழங்கினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com