மதுரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பன்றிக்காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தை, பெண் திங்கள்கிழமை உயிரிழந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டியைச் சேர்ந்தவர் சுல்தான் பேகம் (28). இவர், கடந்த வாரம் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மருத்துவப் பரிசோதனையில் சுல்தான் பேகத்துக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர், தனி வார்டில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலையில் சிகிச்சை பலனின்றி சுல்தான் பேகம் உயிரிழந்தார்.
இதேபோல், மதுரை பொன்னகரத்தைச் சேர்ந்த ஜஸ்வித் (2) என்ற ஆண் குழந்தை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. அங்கு பரிசோதனையில் குழந்தைக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி திங்கள்கிழமை இரவு குழந்தை ஜஸ்வித் இறந்தது.
மதுரை அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை நிலவரப்படி காய்ச்சல் பாதிப்புடன் 65 பேரும், பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட 9 பேரும் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.