மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில், மத்திய அரசு ஊழியரிடம் 15 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸார் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள வானிலை ஆராய்ச்சி மையத்தில் பொறியாளராக பணியாற்றி வருபவர் கல்யாணசுந்தரம். இவர், கடந்த மார்ச் மாதம் மதுரை வந்தபோது பேருந்தில் 15 பவுன் நகைப் பையை பேருந்து இருக்கையில் வைத்துள்ளார். பேருந்து புறப்படத் தயாரான போது, கல்யாணசுந்தரம் வைத்திருந்த நகைப் பையை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இது குறித்த புகாரின்பேரில் கரிமேடு போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இப்புகாரின் மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.