விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் உண்ணாவிரதம் நடத்த அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் விருதுநகர் மாவட்ட செயலர் சுப்ரமணியன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
கடந்த 2016- சட்டப்பேரவை தேர்தலில் சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளேன்.
2016 தேர்தலின்போது பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக மக்களுக்கு வாக்குறுதி அளித்தேன். அவற்றை செயல்படுத்த மக்களின் பிரதிநிதியாக இருந்து குரல் கொடுத்து வருகிறேன். தமிழக அரசு செவிசாய்க்கவில்லை.
இதையடுத்து திட்டங்களை நிறைவேற்றித் தர வலியுறுத்தி சாத்தூரில் நவம்பர் 27 ஆம் தேதி உண்ணாவிரதம் நடத்த அனுமதி கேட்டு காவல்நிலையத்தில் மனு அளித்தேன்.
காவல்நிலையத்தில் இருந்து எந்த பதிலும் அளிக்கவில்லை. எனவே சாத்தூரில் உண்ணாவிரதம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி சாத்தூரில் நவம்பர் 27-இல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் உண்ணாவிரதம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார்.