மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான கபடி போட்டியில் ஒய்டபிள்யுசிஏ பள்ளி வெற்றி பெற்றது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள், பந்தயத்திடல் எம்ஜிஆர் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் தொடங்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் கே.ராஜா, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
காதுகேளாதோர், மனநலம் குன்றியோர், உடல் ஊனமுற்றோர், பார்வைக் குறைபாடு உடையோர் என அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் அவரவருக்குரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
காதுகேளாதோருக்கான ஆடவர் கபடியில் விஸ்வநாதபுரம் ஒய்டபிள்யுசிஏ பள்ளி வெற்றி பெற்றது. பெண்கள் பிரிவில் லியோனர்டு காதுகேளாதோர் பள்ளி வெற்றி பெற்றது. மனநலம் குன்றியோருக்கான ஆடவர் மற்றும் பெண்கள் எறிபந்து போட்டிகளில் அன்பகம் சிறப்பு பள்ளி வெற்றி பெற்றது.
சிறப்பு குழந்தைகளுக்கான ஆடவர் வாலிபால் போட்டியில் சுந்தரராஜன்பட்டி ஐஏபி பள்ளியும், பெண்கள் பிரிவில் பரவை புனித ஜோசப் பார்வையற்றோர் பள்ளியும் வெற்றி பெற்றன. இதுதவிர ஓட்டப்பந்தயம், நின்றநிலை தாண்டுதல் உள்ளிட்ட தனிநபர் பங்கேற்கும் தடகள போட்டிகளும் நடத்தப்பட்டன.
முதலிடம் பெற்றவர்களுக்கு ரூ.5 ஆயிரம், 2-ஆம் இடம் ரூ.3 ஆயிரம், மூன்றாம் இடம் பெற்றவர்களுக்கு ரூ.2 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டன.