வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 32.5 லட்சம் மோசடி செய்ததாக இருவர் மீது மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், திருமுல்லைவாசல், காந்தி நகரைச் சேர்ந்த ராயர் மகன் ரகுராமன். இவர் உள்பட 14 பேரிடம் ஜப்பானில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அம்பலகாரன்பட்டியைச் சேர்ந்த கம்பக்குடியான், அவரது நண்பர் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த மரியதாஸ் ஆகியோர் மொத்தமாக ரூ. 32.5 லட்சம் மற்றும் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக் கொண்டனர்.
பிறகு போலியான நுழைவு இசைவுச் சீட்டுகளையும் வழங்கியுள்ளனர். ஆனால், அவர்கள் கூறியது போல ஜப்பானில் வேலை செய்வதற்கான எந்த உத்தரவும் பெற்றுத் தராமல் தாமதம் செய்து வந்துள்ளனர். பணத்தையும் திருப்பித் தர மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து ரகுராமன் அளித்த புகாரின்பேரில் மதுரை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.