மதுரையில் மழையில் சேதமடைந்த 80 சாலைகள் ரூ.25 கோடியில் சீரமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மதுரை நகரில் சமீபத்தில் பெய்த தொடர் மழையால் அனைத்துச் சாலைகளும் சேதமடைந்து காணப்படுகின்றன. பிரதான சாலைகள் தொடங்கி பெரும்பாலான பகுதிகளின் குறுக்குச் சாலைகள் அனைத்துமே குண்டும் குழியுமாக காணப்படுகின்றன. இந்தநிலையில், மாநகராட்சி எல்லையில் சீரமைக்கவேண்டிய சாலைகள் குறித்த கணக்கெடுப்பு நடந்தது. அதன்படி 80 சாலைகள் சீரமைக்கப்படவேண்டியிருப்பதாக மாநகராட்சி பொறியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
சாலை சீரமைப்புக்காக தமிழக அரசிடம் சிறப்பு நிதியாக ரூ.25 கோடிக்கு அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், அதற்காக வரும் நவம்பர் 2 ஆம் தேதி ஒப்பந்தம் கோரப்படவுள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். அதனடிப்படையில் மாநகராட்சி மண்டலம் 4 (தெற்கு) பகுதியில் அதிகளவு சாலைகள் சீரமைக்கப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.
மதுரை மாநகராட்சியில் பொலிவுறு நகர்த் திட்டத்துக்கான பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பணிகளுக்கான ஒப்பந்தம் கோரல் பணி நிறைவடைந்திருக்கிறது. ஆகவே நவம்பர் இறுதி அல்லது டிசம்பரில் பொலிவுறு நகர்த் திட்டத்துக்கான பணிகள் தொடங்க வாய்ப்பிருப்பதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.