திருமங்கலம் அருகே கோயில் திருவிழா கொண்டாட அனுமதி வழங்கக் கோரி, வட்டாட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
திருமங்கலத்தை அடுத்த காண்டை பகுதியில் கன்னிமாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருவிழாவின்போது, கலவரம் ஏற்பட்டதாம். அதுமுதல் திருவிழா நடத்தப்படவில்லை.
இந்நிலையில் கன்னிமாரியம்மன் கோயிலில் மீண்டும் திருவிழா கொண்டாட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி ஊரின் முதன்மை நாட்டாண்மை ராமராஜன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய வட்டாட்சியர் நாகரத்தினம், இதுகுறித்து போலீஸாரிடம் தெரிவித்து பாதுகாப்பு அளிக்கும் படி மனு அளிக்க அறிவுறுத்தினார். அதன்பேரில் கிராம மக்கள், திருமங்கலம் துணை காவல் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணனிடம் மனு அளித்தனர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட அவர், அமைதிப்பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்து, விரைவில் திருவிழா கொண்டாட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதைத்தொடர்ந்து, கிராம மக்கள் கலைந்து சென்றனர்.