மதுரையில் மாடுகளை பிடிக்க மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவு
மதுரை செல்லூர் அகிம்சாபுரம் பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க, அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.
மாநகராட்சி மண்டலம் 1 (மேற்கு) பகுதிகளில் ஆணையர் அனீஷ்சேகர் ஆய்வு செய்தார். குலமங்கலம் பிரதான சாலைப் பகுதியில் உள்ள அருண் நகர், செல்லூர் அகிம்சாபுரம் மார்க்கெட், வெண்மணி பொட்டல் மணவாளன் நகர் ஆகிய பகுதிகளில் சாலை மற்றும் பாதாள சாக்கடைப் பணிகளை பார்வையிட்டார்.
அகிம்சாபுரம் பகுதியில் சாலைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை பார்த்த ஆணையர், அவற்றை உடனடியாக அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டார்.
மேலும், சாலைகளில் திரிந்த மாடுகளைப் பிடிக்கவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். எலி அய்யனார்கோயில் தெருவை ஆய்வு செய்த ஆணையர், அங்கு சேதமடைந்த சாலையை சீரமைக்க அறிவுறுத்தினார். பாதாளச் சாக்கடை கசிவு ஏற்பட்டு கழிவு நீர் சாலையில் தேங்குவதை அப்பகுதி பொதுமக்கள் ஆணையரிடம் சுட்டிக்காட்டினர். அதையடுத்து பாதாள சாக்கடை மேனுவல் தொட்டியை உயர்த்திக் கட்டவும், புதிதாக அங்கு பேவர் பிளாக் சாலை அமைக்கவும் உத்தரவிட்டார்.
ஆய்வின்போது மாநகராட்சி உதவி ஆணையர் பழனிச்சாமி, உதவிசெயற்பொறியாளர் முருகேசபாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.