உசிலம்பட்டி அருகே சாலை வசதி, குடிநீர் வசதிக் கோரி இருவேறு இடங்களில் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டம் சேடபட்டி அருகேயுள்ள டி.மீனாட்சிபுரம் செல்லும் சாலை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு செப்பனிடும் பணிக்காக சுமார் 3 கி.மீ. தூரம் தோண்டப்பட்டு, பணி நிறைவு பெறாமல் உள்ளது. இதையடுத்து இப்பகுதிக்கு இயக்கப்பட்ட அரசு பேருந்துகளும், 4 தனியார் மற்றும் பள்ளிப் பேருந்துகளும் நிறுத்தப்பட்டன. இதனால் பொதுமக்களும் பள்ளி மாணவர்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகிறார்கள். அவசர வாகனங்கள் கூட வந்து செல்ல முடியாத நிலை உள்ளது. அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் பணிகள் தொடங்கப்படவில்லை.
இதையடுத்து சின்னக்கட்டளை - டி.ராமநாதபுரம் சாலையில் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனர். இத்தகவலறிந்து டி.கல்லுப்பட்டி காவல் ஆய்வாளர் விஜயகாண்டீபன் தலைமையிலான போலீஸார், பேரையூர் துணை வட்டாட்சியர் வீரமுருகன் ஆகியோர் சமரச பேச்சு வார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
குடிநீர் கோரி மறியல்: உசிலம்பட்டி வட்டம், எழுமலை அருகேயுள்ளது குன்னுவார்பட்டியில் கடந்த 3 ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது . இந்நிலையில் கடந்த 10 தினங்களாகவ குடிநீர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது. இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து செவ்வாய்க்கிழமை குன்னுவார்பட்டி கிராம மக்கள் எம். கல்லுப்பட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இத் தகவலறிந்து வந்த சேடபட்டி ஒன்றிய ஆணையாளர் ஆசிக், பேரையூர் துணை வட்டாட்சியர் வீரமுருகன், காவல் ஆய்வாளர் ரமாராணி ஆகியோர் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். உடனே குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என ஆணையாளர் ஆசிக் உறுதியளித்ததை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.