புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை என்பதால், மதுரை மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
தமிழ் மாதமான புரட்டாசி பெருமாளுக்கு உகந்த மாதமாகும். புரட்டாசி முதல் சனிக்கிழமை (செப்.22) மதுரை கூடலழகர் பெருமாள் கோயில், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் மற்றும் திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் என அனைத்துக் கோயில்களிலும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
கூடலழகர் பெருமாள் கோயில், தல்லாகுளம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி பெருந்திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். கோயில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
கூட்டம் அதிகமாக இருந்ததால், கூடலழகர் பெருமாள் கோயில் முன்பாக தடுப்புக் கம்புகள் கட்டப்பட்டு பக்தர்கள் வரிசையாக அனுமதிக்கப்பட்டனர். பெருமாள் சந்நிதி முன்புள்ள மண்டபத்தில் உற்சவர் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்கள் கொண்டுவந்த துளசி மாலைகள் அணிவிக்கப்பட்டு, அர்ச்சனைகள் நடைபெற்றன. அதேபோல், தல்லாகுளம் பெருமாள் கோயிலுக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த தடுப்புக் கம்புகள் வழியாக பக்தர்கள் வரிசையாக அனுப்பிவைக்கப்பட்டனர். சக்கரத்தாழ்வார் சக்கர சந்நிதியில் கூட்டம் அதிகம் காணப்பட்டது. மதுரை அருகேயுள்ள திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயிலிலும் கூட்டம் அலைமோதியது. இங்குள்ள சக்கரத்தாழ்வார் சந்நிதியில் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்தது. புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைதோறும் பக்தர்கள் பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்துவர். பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.