மதுரையில் வணிகவரித்துறை துணை ஆணையர் வீட்டில் 6 பவுன் தங்கம், வைர நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்தை மர்ம நபர்கள் சனிக்கிழமை இரவு திருடிச்சென்றதாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மதுரை எஸ்.எஸ்.காலனி அருணாச்சலம் தெருவைச் சேர்ந்தவர் இளங்கோவன் (42). எல்ஐசி அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சாந்தி(38), வணிகவரித்துறையில் துணை ஆணையராக பணிபுரிந்து வருகிறார்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் இவர்களுக்கு சொந்தமான தோட்ட வீடு உள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை அரசு விடுமுறையை முன்னிட்டு குடும்பத்தினருடன் தோட்ட வீட்டுக்கு சென்று விட்டார்.
அங்கிருந்து சனிக்கிழமை இரவு வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 6 பவுன் தங்க நகைகள், 8 காரட் வைர நகை மற்றும் ரூ.1 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது.
சம்பவம் தொடர்பாக இளங்கோவன் அளித்தப் புகாரின்பேரில் எஸ்.எஸ்.காலனி போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.