உசிலம்பட்டியில் கருக்கலைப்பின்போது உயிரிழந்த பெண்ணின் கணவர், 3 குழந்தைகள் அரசு நலத்திட்ட உதவிகள் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
உசிலம்பட்டி அருகே உள்ள உத்தபுரத்தைச் சேர்ந்த ராமரின், மனைவி ராமுத்தாய். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நான்காவது முறையாக கர்ப்பமடைந்த ராமுத்தாய், தனது வயிற்றில் வளருவது பெண் குழந்தையெனக் கருதி கருக்
கலைப்புக்காக உசிலம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையை அணுகினார். ஆனால், ராமுத்தாய் 7 மாத கர்ப்பிணியாக இருந்ததால் மருத்துவமனை நிர்வாகத்தினர் அதற்கு மறுத்துவிட்டனர். இந்நிலையில் அந்த மருத்துவமனையில் பணியாற்றிய தொட்டப்பநாயக்கனூரைச் சேர்ந்த செவிலியர், அவரது வீட்டில் வைத்து ராமுத்தாய்க்கு கருக்கலைப்பு செய்துள்ளார். அப்போது, ராமுத்தாய் இறந்துவிட்டார். பிரேத பரிசோதனையில் ராமுத்தாயின் வயிற்றில் இருந்தது ஆண் குழந்தை என தெரியவந்தது.
இந்நிலையில், தாயை இழந்து தவிக்கும் 3 குழந்தைகளையும் காப்பாற்ற, அரசின் நலத்திட்ட உதவி வழங்கக் கோரியும், கருக்கலைப்பு செய்த செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ராமர், தனது குழந்தைகளுடன், மாவட்ட ஆட்சியர் ச.நடராஜனிடம் திங்கள்கிழமை மனு அளித்தார்.