உசிலம்பட்டி அருகே விவசாயி இறப்பில் மர்மம் இருப்பதாகக் கூறி, அவரது சடலத்தை வாங்க மறுத்து மதுரை அரசு மருத்துவமனை முன்பாக உறவினர்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சிக்கம்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி பவுன்ராஜ் (48). இவர், அப்பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் வியாழக்கிழமை இரவு தண்ணீர் பாய்ச்சுவதற்காகச் சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லையாம்.
இதனால், அவரது குடும்பத்தினர் வெள்ளிக்கிழமை காலையில் தோட்டத்துக்குச் சென்று தேடியபோது, பவுன்ராஜ் உடம்பில்
தீக்காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார்.
அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, குடும்பத்தினர் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதையடுத்து, போலீஸார் பவுன்ராஜின் சடலத்தை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
சனிக்கிழமை மதியம், மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் குவிந்த பவுன்ராஜின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், அவரது சடலத்தை வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, பவுன்ராஜின் இறப்புக்கு காரணமான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.