தமிழகத்தில் மக்களவைத் தேர்தலோடு காலியாக உள்ள 20 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தலையும் சேர்த்து நடத்தவேண்டும் என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஆர். முத்தரசன் வலியுறுத்தினார்.
தமிழகத்தில் 20 சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாக உள்ளன. தொகுதி காலியான 6 மாத காலத்துக்குள் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தேர்தல் விதி.
மத்திய அரசின் நெருக்குதலுக்கு தேர்தல் ஆணையம் பலியானால் அதன் மீதுள்ள நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிடும். எனவே, மக்களவைத் தேர்தலோடு இந்த 20 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தலையும் சேர்த்து நடத்த ஆணையம் முன் வரவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம்.
வரும் மக்களவைத் தேர்தல் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது. தமிழக நலனுக்கு எதிரான மத்திய அரசை அகற்ற எங்கள் அணி அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் திமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைந்துள்ளது.
அதிமுக, பாஜக ஆகிய இரு கட்சிகளாலும் தமிழகத்தில் வெற்றிபெற முடியாது. காஷ்மீரில் பயங்கரவாதிகள் மிகப்பெரிய படுகொலையை நடத்தியிருக்கின்றனர். இச்சம்பவத்தை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. பலியான வீரர்களுக்கு வீர வணக்கத்தையும், அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறோம். பயங்கரவாதிகளுக்கு தக்க பாடத்தை நாடும், நாட்டு மக்களும் அளிப்பார்கள் என்றார்.