தமிழக அரசின் ரூ.2 ஆயிரம் உதவித் தொகை பெறும் பயனாளிகள் பட்டியலில் சேர்க்கக் கோரி பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
வறுமை கோட்டிற்குகீழ் உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதையொட்டி வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் பட்டியலின்படி, பயனாளிகள் பெயர், விவரங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.
மகளிர் திட்டத்தைச் சேர்ந்த களப் பணியாளர்கள், அனைத்துக் கிராமங்களிலும் வறுமைக்கோட்டின் கீழ் உள்ளோர் பட்டியலில் இடம் பெற்றவர்களின் வீடுகளுக்குச் சென்று பயனாளிகளின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், ஆதார் எண், வங்கி சேமிப்புக் கணக்கு எண், செல்லிடப்பேசி எண் உள்ளிட்ட விவரங்களும் சேகரிக்கப்படுகின்றன. இதற்கிடையே, பயனாளிகள் பட்டியலில் தகுதியானவர்களின் பலரும் விடுபட்டு இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், யா.ஒத்தக்கடை அருகே உள்ள கொடிக்குளம், உசிலம்பட்டி அருகே உள்ள புல்லுக்குட்டிநாயக்கன்பட்டி, டி.கிருஷ்ணாபுரம், வாடிப்பட்டி அருகே உள்ள காந்திகிராமம், காஞ்சரம்பேட்டை அருகே உள்ள சில்லுப்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
தாங்கள் கூலிவேலை செய்து வருவதாகவும், குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்து வந்தபோதும் ரூ.2 ஆயிரம் உதவித் தொகை பெறுவதற்கான பட்டியலில் பெயர் விடுபட்டிருப்பதாகவும் புகார் தெரிவித்தனர். பின்னர் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ச.நடராஜனிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.