மதுரையில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான கூடைப் பந்து போட்டியில் பெண்கள் பிரிவில் காஞ்சிபுரம் அணியும், ஆண்கள் பிரிவில் சென்னை அணியும் முதலிடம் பெற்றன.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் இப்போட்டிகள் டாக்டர் எம்ஜிஆர் விளையாட்டு அரங்கில் செவ்வாய்க்கிழமை தொடங்கின. இதில் 32 மாவட்டங்களில் இருந்தும் ஆண்கள் பிரிவில் 32 அணிகள், பெண்கள் பிரிவில் 32 அணிகள் என 64 அணிகள் பங்கேற்றன.
இதில் நாக் அவுட் முறையில் நடைபெற்ற போட்டிகளில் தோல்வியடைந்த அணிகள் வெளியேறின. இதையடுத்து, பெண்கள் பிரிவில் சென்னை, மதுரை, காஞ்சிபுரம், சேலம் ஆகிய அணிகளுக்கு இடையே இறுதிப்போட்டிகள் நடைபெற்றன.
இப்போட்டிகளில் பெற்ற புள்ளிகள் அடிப்படையில் காஞ்சிபுரம் அணி முதலிடம், சென்னை அணி இரண்டாமிடம், சேலம் அணி மூன்றாமிடம் பெற்றன.
ஆண்கள் பிரிவில், மதுரை, தூத்துக்குடி, சென்னை, காஞ்சிபுரம் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டிகளில், சென்னை அணி முதலிடம், காஞ்சிபுரம் இரண்டாமிடம், மதுரை அணி மூன்றாடமிடம் பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் பரிசு ரூ.1லட்சம், இரண்டாம் பரிசு ரூ.75 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது.