மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டை மதுரைக்காவலன் செயலி மூலம் 56 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக ஊரகக்காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடைபெற ஊரகக் காவல்துறை சார்பில் பல்வேறு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 1500 காவலர்கள் மற்றும் இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்பு படையினர் இணைந்து பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.
இதனால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைவாக இருந்தது. மேலும் ஜல்லிக்கட்டு போட்டிகளை
காவல்துறை சார்பில் மதுரைக்காவலன் செயலி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த செயலி மூலம் ஜல்லிக்கட்டை 56 ஆயிரம் பேர் கண்டு களித்துள்ளனர். மேலும் மதுரை காவலன் செயலியில் கார், இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் அவசர உதவி எண்கள், மருத்துவ உதவி மையங்கள் போன்ற தகவல்களை தெரிவித்ததன் மூலம் சிரமங்கள் தவிர்க்கப்பட்டு ஜல்லிக்கட்டு அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.