மதுரையில் இரு சக்கர வாகனம் மோதியதில் தேநீர் கடை ஊழியர் சனிக்கிழமை உயிரிழந்தார்.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் சோலைஅழகுபுரம் 3-ஆவது தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன்(46). இவர், பை-பாஸ் சாலையில் உள்ள தேநீர் கடையில் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலையில் வேலைக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, நேரு நகர் சந்திப்பு வழியாக வந்த இரு
சக்கர வாகனம் மோதியது. இதில், பாலமுருகன் பலத்த காயமடைந்தார்.
உடனே, அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் வாகனத்தில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததில், பாலமுருகன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பாக பாலமுருகன் சகோதரர் கருப்பசாமி அளித்த புகாரின்பேரில், கரிமேடு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.