தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் புதன்கிழமை பிரசாரத்தை தொடங்கினார்.
மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் போட்டியிடுகிறார். இதையொட்டி முதற்கட்ட வாக்குசேகரிப்பு புதன்கிழமை தொடங்கியது.
இதில் தேனி மக்களவை தொகுதிக்குள்பட்ட சோழவந்தான் சட்டப்பேரவை தொகுதி அலங்காநல்லூர் அருகே உள்ள மஞ்சமலை அய்யனார் கோயிலில் சிறப்பு வழிபாட்டுடன் பிரசாரம் தொடங்கியது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் கே.ராஜூ, அமைப்புச் செயலர் முத்துராமலிங்கம், சோழவந்தான் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் கே.மாணிக்கம், மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆர்.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
கோயிலில் சிறப்பு வழிபாட்டுக்கு பின்னர் அப்பகுதியில் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்குகள் சேகரித்தார். அவருடன் அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளும் வாக்குகள் சேகரித்தனர்.
இதையடுத்து குமாரம், அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளுக்கும் சென்று வாக்குகள் சேகரித்தார். இதில் அப்பகுதி பொதுமக்கள் ஓ.பி.ரவீந்திரநாத் குமாருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பளித்தனர்.
மேலும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு குழுவினர் சார்பில் ஜல்லிக்கட்டு காளைகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள கோயிலில் சிவாச்சாரியார்கள் கும்ப மரியாதையுடன் வரவேற்பளித்தனர். இதைத்தொடர்ந்து சத்திரவெள்ளாளப்பட்டி பகுதிக்கு சென்ற ஓ.பி.ரவீந்திரநாத்குமார் அங்குள்ள தேவர் சிலைக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அப்பகுதியிலும் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பிரசாரத்தில் அதிமுக நிர்வாகிகள், பாஜக நிர்வாகிகள், தமாகா நிர்வாகிகள், பாமக நிர்வாகிகள், தேமுதிக நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.