மதுரையில் சித்திரைத் திருவிழா நாளில் வாக்குப்பதிவு நடைபெறுவதால் 2 ஐஜி-க்கள் மேற்பார்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக என்று மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியது:
மதுரை மக்களவைத் தொகுதியில் 1,574 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 446 வாக்குச் சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும்.
சித்திரைத் திருவிழா தேரோட்டம் நாளன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், வாக்குப்பதிவுக்கு கூடுதலாக 2 மணி நேரம் வழங்கப்பட்டுள்ளது. காலை 6 மணிக்குத் தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெறும். தேரோட்டம் நடைபெறும் வீதிகளில், 33 வாக்குச் சாவடிகள் உள்ளன. அந்த மையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும். திருவிழா நடைபெறும் பகுதிகளுக்கு பக்தர்கள் செல்வதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால், பக்தர்களைப் போல செல்வதற்கு அரசியல் கட்சியினருக்கு அனுமதி கிடையாது.
திருவிழா நாளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாலும், வாக்குப்பதிவுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாலும் மதுரை மக்களவைத் தொகுதிக்கு இரு ஐஜி-க்கள் மேற்பார்வையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த தேர்தலைவிட இந்த மக்களவைக் தேர்தலில் கூடுதல் எண்ணிக்கையில் சிஆர்பிஎப் வீரர்கள், இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
வாக்குச்சாவடிகளின் மின்வசதிக்காக ஜெனரேட்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வாக்குச் சாவடிகளுக்கு வாக்காளர்கள் தடையின்றி செல்ல கூடுதல் பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் இதுவரை தேர்தல் விதிகளை மீறி ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ. 15 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேனி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட சோழவந்தான் மற்றும் உசிலம்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிகளில் 183 வாக்குச் சாவடிகளும், விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட திருப்பரங்குன்றம் மற்றும் திருமங்கலம் பேரவைத் தொகுதிகளில் 165 வாக்குச்சாவடிகளும் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.