இலங்கையில் விடுதலை செய்யப்பட்ட ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 26 பேர் விமானம் மூலம் வெள்ளிக்கிழமை மதுரை வந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை பகுதி மீனவர்கள் 13 பேர் கடந்த பிப். 20 மற்றும் 25 ஆம் தேதிகளில்
கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல ராமேசுவரம் பகுதி மீனவர்கள் 5 பேர் கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதியும், மண்டபம் பகுதி மீனவர்கள் 8 பேர் கடந்த 20 ஆம் தேதியும் இலங்கை கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் கடந்த 8 ஆம் தேதி மீனவர்கள் 26 பேரையும் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. இதையடுத்து அவர்கள், இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இந்நிலையில் இலங்கையிலிருந்து விமானம் மூலம் 26 பேரும் சனிக்கிழமை மதுரை வந்தனர். அவர்களை மீன் வளத்துறை ஆய்வாளர்கள் நடேசன், ரமேஷ்பாபு, சகுபர் சாதிக், நடேஷ்பிரபு ஆகியோர் வேன் மூலம் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் சென்றனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் மீனவர்கள் கூறியது: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டோம். தமிழக மீன்வர்களின் வாழ்க்கை பாதுகாப்பற்று கேள்வி குறியாக மாறியுள்ளது.
ஒரு முறை கைது செய்யப்பட்ட பின் 4 ஆண்டுகளுக்குள் மீண்டும் கைது செய்யப்பட்டால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என இலங்கை நீதிமன்றம் கூறி அனுப்பியுள்ளது. எங்களுடன் பிடிபட்ட 16 தமிழக மீனவர்கள் இன்னும் இலங்கை சிறையில் உள்ளனர். இதில் மண்டபத்தை சேர்ந்த அப்துல்லா என்பவர் 2 ஆவது முறையாக பிடிபட்டதால் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்றனர்.