தமிழகத்தில் வருவாய்த்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் அ.அன்வர்ராஜா இல்லத் திருமண விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் உள்ள வருவாய்த்துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் தமிழக முதல்வரின் அரசாணை பெற்று விரைவில் நிரப்பப்படும். தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் குடியிருந்து வரும் ஏழை எளியவர்களுக்கு ஆறுமாத காலத்தில் நிலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை தமிழகத்தில் 16 லட்சத்து 50 ஆயிரம் ஏழை, எளியவர்களுக்கு அரசு புறம்போக்கு நிலங்கள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் 6 மாத காலத்தில் பல லட்சம் குடும்பங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. "கஜா' புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்கள் இன்னும் ஒரு மாத காலத்தில் இயல்பு நிலைக்கு திரும்பும். அதற்கான பணிகளை அரசு விரைவாக மேற்கொண்டு வருகிறது என்றார்.
பதாகைகள் கிழிப்பு: திருமண விழாவுக்கு ராமநாதபுரம் நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் அதிமுக சார்பில் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. இவற்றை சிலர் கிழித்து சேதப்படுத்தினர். இச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.