வழக்குரைஞர்கள், நீதிபதிகள் சட்டக்கல்லூரி மாணவர்கள் சமூக நலனைக் காக்கும் வகையில் செயல்படவேண்டும் என ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிபதி ஏ.கயல்விழி கூறினார்.
ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கான 15 நாள்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி வியாழக்கிழமை தொடங்கியது. மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பயிற்சியைத் தொடங்கி வைத்து முதன்மை மாவட்ட நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான ஏ.கயல்விழி பேசியது: நமது நாட்டின் ஜனநாயகம், மக்கள் உரிமையை சட்டரீதியாகக் காக்கும் மிகப் பெரிய பொறுப்பை நீதித்துறை வகிக்கிறது. உலக அளவில் பெருமைக்குரிய நமது நீதித்துறையின் அடிப்படை கட்டமைப்பு சட்டக்கல்லூரிகளில் தொடங்குகிறது.
சட்டங்களைப் பயின்றவர்கள் ஏழைகளிடம் இரக்கமுடையவர்களாகவும், மனிதநேயம் மிக்கவர்களாகவும் இருக்கவேண்டும். எதிர்காலத்தில் சமூக நலன் காக்கும் வகையில் சட்டம் பயின்றவர்கள் திகழ வேண்டும் என்றார்.
முன்னதாக மாவட்ட சார்பு நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலருமான வி.ராமலிங்கம் வரவேற்றார். ராமநாதபுரம் அரசு சட்டக்கல்லூரி முதல்வர் ராமபிரான்ரஞ்சித்சிங், வழக்குரைஞர்கள் சங்கச் செயலர் ஏ.ஆர்.நம்புநாயகம், மூத்த வழக்குரைஞர் கே.குணசேகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலக பணியாளர்கள் எஸ்.லோகநாதன், நிர்வாக அலுவலர் சுப்பிரமணி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.