கமுதி அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இம்மருத்துவமனையில் அரசு நியமனம் செய்த மருத்துவர்களின் எண்ணிக்கை 10 ஆகும். ஆனால் இருப்பது 3 பேர் மட்டுமே. துப்புரவு பணியாளர்கள் 5 பேருக்கு 2 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். மருத்துவ பணியாளர்கள் 6 பேருக்கு 4 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இந்நிலையில் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையால் மருந்து சீட்டு வழங்குதல், மருத்துவ ஆலோசனை, சிகிச்சை உள்ளிட்ட வசதிகள் குறைவால் நோயாளிகள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் மருத்துவர்கள் பற்றாக்குறையால் பெரும்பாலான நோயாளிகள் அரசு மருத்துவமனைக்கு வந்து பல மணி நேரம் காத்து கிடக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. தற்போது மர்மக் காய்ச்சல், பன்றிக்காய்சல், வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவி வருகின்றன. இந்நிலையில் கமுதி பகுதியில் காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் இம்மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். பின்னர் காய்ச்சலின் தீவிரம் அதிகரித்ததும் இங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஏழை மக்கள் கடன் வாங்கி மதுரை, அருப்புக்கோட்டை ஆகிய நகரங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளை நாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலர் வி.குருநாதன் கூறியதாவது: கமுதி அரசு மருத்துவமனையில் கடந்த 10 ஆண்டுகளாக மருத்துவர்கள், பணியாளர்கள் பற்றாக்குறையால் நோயாளிகளில் பெரும்பாலானோர் மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இதனால் இங்கு மாவட்ட மருத்துவமனைக்கு இணையாக மருத்துவ சாதனங்கள் இருந்தும் பயனில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் கமுதி அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்காவிட்டால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மருத்துவமனை முன் ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடத்தும் என்றார்.