ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மர்ம காய்ச்சலால் கார் ஓட்டுநர் புதன்கிழமை உயிரிழந்தார்.
முதுகுளத்தூர் காமராஜர்புரத்தைச் சேர்ந்த ஹரிதாஸ் மகன் குணா (38). கார் ஓட்டுநர். இவருக்கு கடந்த 10 நாள்களாக தொடர்ந்து மர்மக் காய்ச்சல் இருந்த நிலையில் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
அங்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளிக்க வராததால் காய்ச்சல் அதிகரித்த நிலையில், ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்று சிகிச்சை அளித்தும் காய்ச்சல் குறையவில்லை.
பின்னர் மதுரை தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குணா உயிரிழந்தார். இவரது குடும்பத்தினர் கூறும் போது, குணா, பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு போதிய மருத்துவ வசதி இல்லாததால் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து மாவட்ட பன்றிக்காய்ச்சல் தொடர்பான மருத்துவ அதிகாரி சுடலைமணியிடம் கேட்ட போது, குணாவுக்கு பன்றிக் காய்ச்சல் இருந்ததாக எந்த மருத்துவமனையிலும் சான்றிதழில் மருத்துவர்கள் தெரிவிக்க வில்லை. இதனால் சாதாரண காய்ச்சலால் தான் அவர் இறந்தார் என்றார்.