திருவாடானைப் பகுதியில் மழையின்றி விவசாயிகள் கவலை

"கஜா' புயல் காரணமாக, ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை கனமழை

"கஜா' புயல் காரணமாக, ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை கனமழை பெய்த நிலையில்,திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் பகுதிகளில் மழை இல்லாததால், விவசாயிகள் கவலை அடைந்தனர். 
   திருவாடனை, ஆர்.எஸ்.மங்கலம் பகுதிகளில் விவசாயமே பிரதான தொழிலாகும். தமிழகத்தின் இரண்டாவது நெற்களஞ்சியம் என்றழைக்கப்படும் இப்பகுதியில் சுமார் 42 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் நேரடி நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. 
    இப்பகுதியில் முழுக்க முழுக்க மழையை நம்பியே விவசாயம் நடைபெறுகிறது. எனவே, கடந்த மாதம் பெய்த மழையை வைத்து விவசாயிகள் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டு, தற்போது பயிர்கள் நன்கு வளர்ந்துள்ள நிலையில் மழையை எதிர்நோக்கி காத்திருந்தனர். 
     ஆண்டுதோறும் பருவமழை செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களில் பெய்வதுண்டு. அச்சமயத்தில் மழை நீரை கண்மாய்கள், குளங்களில் தேக்கிவைத்து நீர்ப்பாசனம் செய்து, விவசாயம் நடைபெறுவது வழக்கம்.
    கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததன் காரணமாக, வறட்சியின் பிடியில் சிக்கியிருந்த விவசாயிகள், இந்த ஆண்டு மழையை எதிர்நோக்கி காத்திருந்தனர். இந்நேரத்தில், "கஜா' புயலால் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததால், விவசாயிகளும் ஆவலுடன் காத்திருந்தனர். 
    ஆனால், வியாழக்கிழமை இரவு 8 மணி அளவில் சிறு தூறல் மட்டுமே இருந்தது.  வெள்ளிக்கிழமை அதிகாலை 6 முதல் 8 மணி வரை பலத்த காற்று மட்டுமே வீசியது. இதனால், சில இடங்களில் மரங்கள் சாய்ந்தன. 
    மழையின்றி கஜா புயல் காற்றோடு கலந்து சென்றதால், இந்த ஆண்டு பருவ மழையும் பொய்த்துவிட்டதை எண்ணி, திருவாடானை பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com