ராமேசுவரத்தில் நிலவும் சுகாதாரச் சீர்கேட்டை தடுக்கவில்லை எனில், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையரை ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் புனித தலமாகவும், சுற்றலா பகுதியாகவும் விளங்குவதால், பல்வேறு திட்டப் பணிகள் மற்றும் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள மத்திய-மாநில அரசுகள் நகராட்சிக்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கி வருகின்றன. ஆனால், நகராட்சி அதிகாரிகள் முறையாக சுகாதாரப் பணிகளை மேற்கொள்வதில்லை என தொடர்ந்து மாவட்ட ஆட்சியருக்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டன.
அதனடிப்படையில், மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் வெள்ளிக்கிழமை ராமேசுவரம் வந்து சுகாதாரப் பணிகளை ஆய்வு செய்தார். இங்கு, பொதுமக்கள் அதிகளவில் வரக்கூடிய நகராட்சி மீன் மற்றும் காய்கறி சந்தையை ஆய்வு செய்தார்.
அப்போது, எங்கு பார்த்தாலும் கழிவுநீர் மற்றும் குப்பைகள் தேங்கி கடும் துர்நாற்றம் வீசி சுகாதாரச் சீர்கேடு நிலவுவதை ஆட்சியர் பார்வையிட்டார். பின்னர், அப்பகுதியில் வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, தினமும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடும் அக்கினி தீர்த்தக் கரைக்குச் சென்றார். அங்கு தனியார் விடுதிகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் அனைத்தும் கடலில் கலப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்போது, உடன் வந்திருந்த நகராட்சி ஆணையர் (பொறுப்பு) அய்யனார் மற்றும் ஊழியர்களிடம் இன்னும் 21 நாள்களில் இப்பகுதியை முழு சுகாதாரமான நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையெனில், தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.